சேலம் ஆவினில் பால் பண்ணை பிரிவில் சிறப்பு நிலை டெக்னீசியனாக கணேசன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பதவி உயர்வு பெற்று தருவதாகவும், ஆவினில் வேலை பெற்று தருவதாகவும் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தன. அந்த புகாரை 3 அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. அதில், கணேசன் பணத்தை பெற்றுக் கொண்டு பணி பெற்று தருவதாகவும், பதவி உயர்வு வாங்கி தருவதாகவும் கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அறிக்கை அடிப்படையில் கணேசனை சஸ்பெண்டு செய்து, ஆவின் பொதுமேலாளர் விஜயபாபு உத்தரவிட்டார். இவர் நேற்று (31-ந்தேதி) ஓய்வு பெற இருந்த நிலையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். கணேசன் மீது பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஏற்கனவே 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.