நாகையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக 5 கோடியே 16 லட்சம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இதில் 85 சதவீதம் புத்தகங்கள் பள்ளி தொடங்கிய நாளிலேயே வழங்கப்பட்டு விட்டன. சி.பி.எஸ்.இ., மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளதால் 10 சதவீதம் கூடுதலாக தமிழ் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேடை நாகரிகத்தை கற்றுக்கொடுத்தவர் கலைஞர். கலைஞர் ஆட்சியில்தான் பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தலைமை கழக பேச்சாளர்கள் மற்றும் அமைச்சர்கள் கண்ணியமாக மேடையில் பேசவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பெண்களின் வாழ்க்கைத்தரத்தை பொருளாதாரத்தில் உயர்த்துவதே திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம் ஆகும். கல்விக்காக மிகப்பெரும் திட்டங்களை கலைஞர் கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டு பள்ளி பாட புத்தகத்தில் ‘செம்மொழி நாயகன் கலைஞர்’ அல்லது ‘தமிழகத்தின் சிற்பி கலைஞர்’ என்ற புதிய பாடம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.