கன்னியாகுமரிமாவட்டம் வெத்திலைகோட்டையைச் சார்ந்த கிளிட்டஸ் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதற்கான பணத்தை வட்டியும், அசலுமாக கடன் தொகை முழுவதையும் செலுத்தி விட்டார். ஆனால் தவணைகள் முடிந்த பிறகும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வங்கிக் காசோலைகளை திரும்ப கொடுக்கவில்லை. அதை நிதி நிறுவனத்திடம் கேட்டபோது, அதனை நிதி நிறுவனம் வழங்கவில்லை. உடனடியாக நுகர்வோர் பாதுகாப்பு மையம் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான நுகர்வோர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு காசோலைகள், ரூ.15 ஆயிரம் நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.