குலசேகரம் மணலோடை வில்சாரி மலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மகள் சீதா (வயது 38). இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக சீதாவை காப்பாற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் சீதாவிடம் விசாரணை நடத்தினர். தனது பிரச்சினைக்காக கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக தெரிவித்தார். போலீசார் அவரை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சீதா மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.சீதா ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதையடுத்து இன்று பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கலெக்டர் அலுவல கத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தனர்.அவருடைய பேக்குகள் முழுமையான சோதனை செய்யப்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நீடித்தது.