குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இங்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக வடமாலை சாத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த மார்ச் மாதம் உருவான கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் நடைபெற்று வந்த பல்வேறு பூஜை மற்றும் திருவிழாக்கள் தடைபட்டதுடன் வழிபாடுகளும் நிறுத்தம் செய்யப்பட்டன.
பின்னர் தமிழக அரசு பல்வேறு தளர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திருவிழாக்கள் மற்றும் வழிபாடு நடத்தவும் உத்தரவு பிறப்பித்தது. இதைதொடர்ந்து பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேர்த்திக்கடனாக வடமாலை சார்த்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரவு பிறப்பித்த கோவில் நிர்வாகத்திற்கு பக்தர்கள் சங்கம் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துள்ளனர்.